திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.