இந்தியா

பி.எம்.கிசான் நிதி: வாரணாசியில் இன்று 20வது தவணையை வழங்குகிறார் பிரதமர் மோடி
- பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணையில் பெறுகிறார்கள்.
- இதுவரை 19 தவணையாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகள் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பிரதமர் மோடி 20வது கட்ட தவணையை இன்று விடுவிக்கிறார்.
நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.