இந்தியா

அமைதி திரும்ப ஜனநாயக அரசை அமையுங்கள்: அமித் ஷாவுக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.-க்கள் கடிதம்
- ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர்.
- ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வன்முறை நடைபெற்று வந்த நிலையில் முதல்வராக இருந்த பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி திரும்ப ஜனநாயக அரசை அமையுங்கள் என அமித் ஷாவுக்கு 13 பாஜக எம்.எல்.ஏ.-க்கள், 3 என்பிபி, 3 நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர். எனினும், ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.
மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்ற உறுதியான அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. ஏராளமான அமைப்புகள் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியுள்னர்.
ஒரு ஜனநாயக அரசு அமைப்பதற்கு உரிமை கோராததற்காகவும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயித்ததற்காகவும் ஆளும் எம்.எம்.ஏ.-க்களை குற்றம்சாட்டி பேரணிகள் நடத்தப்படுகின்றன.
ஜனநாயக அரசு அமைப்பதன் மூலமாக மட்டுமே மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப முடியும் என உணர்கிறோம். மணிப்பூர் மக்களின் நலன் கருதி விரைவில் ஜனநாயக ஆட்சி அமைய உள்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.