இந்தியா

அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்.. பக்தர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி அம்பலம்!
- பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
- இந்திய பக்தத்ர்களிடம் ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 வசூலிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது. ராமரின் பிரசாதம் என்று கூறி பக்தர்களிடம் இருந்து ரூ.3.85 கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 2024 இல் கருவறையில் ராமர் சிலை பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பதாக காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தெய்வீக பிரசாதத்தை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதாக உறுதியளித்து ஒரு போலி வலைத்தளம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்த நபர் காஜியாபாத்தை சேர்ந்த ஆஷிஷ் சிங் என்று தெரியவந்தது.
ஆஷிஷ் சிங் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் 'khadiorganic.com' என்ற போலி போர்ட்டலைத் தொடங்கினார். அதில் ராமர் கோவில் பிரசாதம், கோயிலின் புகைப்படங்கள் மற்றும் நினைவு நாணயங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
இருப்பினும், அவர் இந்திய பயனர்களிடமிருந்து ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 "வசதி கட்டணம்" வசூலித்தார்.
இதில் டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டன.
வலைத்தளம் உள்ளே செல்ல, டிஜிட்டல் முறையில் பல நுழைவு கட்டணங்கள் மூலம் அவர் பணம் பெற்றார். இவ்வாறு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.10.49 கோடி, அதில் ரூ.3.85 கோடி பிரசாத விநியோகத்திற்காக மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்த மோசடி வழக்கில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 420, ஐடி சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.