இந்தியா

ஆந்திராவில் காலால் எட்டி உதைக்கும் வினோத திருவிழா: முக்தி கிடைக்கும் என நம்பிக்கை
- பூசாரியிடம் உதை வாங்குவதற்காக வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.
- 500 ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னஹோதுரு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்த ராமேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது அருள் வந்து ஆடும் பூசாரி உதைத்தால் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கை உள்ளூர்வாசிகளிடையே உள்ளது. பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் இந்த வினோத திருவிழா சமீபத்தில் நடந்தது.
இதில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் முடிந்ததும் பூசாரி அருள் வந்து ஆடினார். பூஜை பொருட்கள் அடங்கிய பொருட்களை தலையில் சுமந்து கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு ஆவேசமாக அங்கும் இங்குமாக ஓடி ஆடினார். பூசாரியிடம் உதை வாங்குவதற்காக கோவிலில் இருபுறமும் வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு ஆவேசமாக வந்த பூசாரி ஓடி ஓடி பக்தர்களை காலால் எட்டி உதைத்தார்.மேலும் சில பக்தர்களுக்கு காலால் எட்டி உதைக்கும் போது அருள் வாக்கினையும் கூறினார். பூசாரியிடம் உதை வாங்காத பக்தர்கள் தன்னை பூசாரி உடனே மிதிக்க வேண்டும் என இரு கைகளையும் கூப்பி சாமியை வணங்கிய படி நின்றனர்.
பூசாரியிடம் மிதி வாங்கிய பக்தர்கள் குங்குமம், மஞ்சள் நீர் போன்றவற்றை அர்ச்சனை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். கோவில் பூசாரி பக்தர்களை காலால் எட்டி உதைக்கும் வினோத திருவிழா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆச்சரியப்பட வைக்கும் இந்த வினோத திருவிழாவை பார்த்து வியந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்கு பாரம்பரியத்தை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.