இந்தியா

பதற்றத்தை தவிர்க்க ஈரான்-இஸ்ரேலுக்கு மத்திய அரசு அட்வைஸ்!
- அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
- இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த மோதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம்.
அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இரு தரப்பினரும் எந்தவிதமான பதட்டத்தையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்துகிறது.
சூழ்நிலையைத் தணிக்கவும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளதுடன், அனைத்து விதமான ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது" என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில், "இரு நாடுகளிலும் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.