இந்தியா

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் நியாயமற்றது- கிரண் பேடி
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- பெங்களூரு கமிஷனர் உள்பட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றதால், ஆர்சிபி அணி வீரர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர்.
ஆர்சிபி அணிக்கு சட்டசபை அமைந்துள்ள இடத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தைக் காண லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் மைதானத்திற்கு நுழைய முற்பட்டதால் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது நியாமானது, பகுத்தறிவானது அல்ல என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:-
சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. கமிஷனர் எல்லாவற்றையும் புறக்கணித்தாரா? கமிஷனரை எப்படி நீங்கள் சும்மா குற்றம்சாட்ட செல்ல முடியும்? இது நியாயமற்றது.
அவர் தனிமையில் பணியாற்றவில்லை. பெங்களூரு மக்களுக்கு யார் என்ன பங்கு வகித்தார்கள் என்பது கூட தெரியாது. இந்த நிகழ்வில் அவர் தனியாக இல்லை. அரசியல் தலைவர்களும் இருந்தனர்.
பகுத்தறிவு இல்லாத, நியாயமான, விளக்கப்படாத எந்தவொரு இடைநீக்கமும் அதிகாரிகளுக்கான மன உறுதியைக் குலைப்பதாகும். இது மிகவும் அவசரமாக செய்யப்பட்டது. அவர் தனியாக இல்லை. மொத்த அமைப்பின் ஒரு பகுதிதான் அவர்.
இவ்வாறு கிரண் பேடி தெரிவித்துள்ளார்.