இந்தியா

வயநாட்டில் மின்வேலியில் சிக்கி யானை பலி
- முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் சமீப காலமாக புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து தாக்கி வருகிறது. இதில் உயிர்ப்பலியும் நடந்துள்ளது.
இந்த நிலையில் முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 35 வயதான யானை இறந்து கிடந்தது. அந்த யானை மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
அந்த பகுதியில் வன நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் தான் யானை சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகே இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான்பத்தேரி வனசரக அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.