திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், தனது தாயின் செல்போன் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அதில் சில நபர்கள், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரம் அவரது தாய் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வெளியே சென்றிருந்த அவனது தாய் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் சம்பந்தமில்லாத ஒரு நபர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அது யார்? என்று கேட்டபோது சிறுவன் சரியாக பதில் கூறவில்லை.
இதையடுத்து அவன் பயன்படுத்திய தனது செல்போனை சிறுவனின் தாய் சோதனை செய்தார். அப்போது சில வித்தியாசமான செயலிகள் தனது செல்போனில் இருப்பதை அவர் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவர்களிடம் தான், சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்திருக்கிறான். சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சிறுவன் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவனை தவறாக பயன்படுத்திய நபர்களை பற்றிய தகவல்களும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் படன்னக்காடு சைனுதீன்(வயது52), வெள்ளச்சல் சுகேஷ்(30), வடக்கக்கொவ்வல் ரைஸ்(40), கலோலாடு அப்துல் ரகுமான்(55), சந்தேரா பகுதியை சேர்ந்த அப்சல்(23), சித்தராஜ்(48) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சைனுதீன் என்பவர் பேக்கல் பகுதியில் உள்ள கல்வி அலுவலகத்தில் மாவட்ட துணைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள சிராஜ் என்பவர் உள்பட மேலும் 7 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அவர்கள் தலைமறைவு நபர்களை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கல்வி அதிகாரி சைனுதீன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.
சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.