இந்தியா

'எனது சிந்தூரை திருப்பி கொடுங்கள்' - பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரின் கர்ப்பிணி மனைவி கோரிக்கை
- BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
- ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.