இந்தியா

பேருந்தில் மாநில பெயரை மறைத்ததற்கு எதிராக போராட்டம்: ராஜ் பவனுக்கு ஹெலிகாப்டரில் சென்ற கவர்னர்
- மெய்தி மக்களின் ஷிருய் விழா விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
- பத்திரிகையாளர்களுடன் மாநில பேருந்தில் மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக அஜய் குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் டெல்லிக்கு சென்றிருந்தார்.
இவருக்கு எதிராக மெய்தி சமூகத்தினர் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். இதனை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தியதுடன். கலைந்து செல்ல கண்ணீர் புகைக்குண்டு வீசியது பேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்தி சமூகத்தினரின் ஷிருய் விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
20ஆம் தேதி பத்திரிகையாளர்களுடன் சென்ற மணிப்பூர் மாநில அரசு பேந்தில், மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு மெய்தி சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், டெல்லி சென்றுள்ள கவர்னர் இம்பால் திரும்பி ராஜ் பவனுக்கு செல்லும் வழியில் போராட்ட பேரணி நடத்தவும், சாலைகளின் இருபுறமும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் அஜய் குமார் பல்லா இன்று இம்பால் திரும்பினார். அப்போது மெய்தி சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். அதை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தில் இருந்து ராஜ் பவன் சென்றார் ஆளுநர்.
பேருந்தில் மணிப்பூர் பெயரை மறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "மணிப்பூர் அடையாளம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. மணிப்பூர் மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் மெய்தி மக்கள் ஈடுபட்டனர்.