இந்தியா

மல்லிகார்ஜுன்
HIV தொற்று பாதித்த சகோதரனை கொலை செய்த சகோதரி.. குடும்ப பெருமைக்கு களங்கம் என கூறி வெறிச்செயல்
- அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டும்மி(Dummi) கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான மல்லிகார்ஜுன்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்தித்து வந்தார். ஜூலை 23 ஆம் தேதி, தனது நண்பரின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுன், நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில், அவரும் அவரது நண்பர்களும் காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் சித்ரதுர்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லிகார்ஜுன் மேல் சிகிச்சைக்காக தாவநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து, அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்த அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மல்லிகார்ஜுன் உடைய மூத்த சகோதரி நிஷா அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்களிடம் கூறினார்.
ஜூலை 25 ஆம் தேதி மாலை, மல்லிகார்ஜுனை பெங்களூருக்கு அழைத்துச் செல்வதாக நிஷா தனது தந்தையிடம் தெரிவித்தார். இருப்பினும், பயணத்தின் போது, மல்லிகார்ஜுன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலுடன் வீடு திரும்பினார்.
மகன் மரணம் தொடர்பாக தந்தை நாகராஜப்பா தனது மகள் நிஷா மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் அடைந்து விசாரித்தார். அப்போது நிஷா தனது கொடூரமான செயலை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
இதை தொடர்ந்து நாகராஜப்பா மகள் நிஷா மற்றும் அவர் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். HIV தோற்று குறித்த தவறான புரிதல் காரணமாக ஒரு இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.