இந்தியா

ஓனரும் இல்லை, வேலையாட்களும் இல்லை... நம்பிக்கை பேரில் ஜோராக இயங்கி வரும் டீக்கடை
- தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார்.
- கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது.
தேநீர் பிரியர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ வழக்கமான தேநீர் அரட்டைகளைத் ஒருபோதும் தவறவிட விரும்புவது இல்லை. தேநீர் மற்றும் தேநீர் குடித்தபடியே அரட்டை அடிப்பது என இந்த இரண்டும் அவர்களுக்கு ரொம்ப முக்கியம்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் ஒரு டீக்கடை கடைக்காரர் இல்லாமல் இயங்கி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் சம்பூரில் உள்ள ஒரு சந்தில் அமைந்துள்ள இந்த சிறிய டீக்கடை ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. இது சம்பளம் வழங்குவதில்லை. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற கப் டீயை வழங்கி உள்ளது.
தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார். காலை முதல் மாலை 7 மணி வரை பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உள்ளூர்வாசிகள் என கடைக்கு வரும் எல்லோரும் மாறி மாறி பார்த்துக்கொள்கின்றனர்.
கடைக்கு வருபவர்களே தேநீர் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள், பணம் வசூலிக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு ரூபாயை கூட எதிர்பார்க்காமல் செய்கிறார்கள்.
கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது. எனினும், அவர்கள் குடித்த டீக்கான பணத்தை அங்குள்ள பணப்பெட்டியில் தவறாமல் போட்டுவிடுகிறார்கள்.
இது முழுக்க முழுக்க நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் இயங்குகிறது.