இந்தியா

உ.பி.யில் பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள்: அசடு வழிந்த மணமக்கள்
- மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
- டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர், மகளின் பிறந்தநாள் விழாவுக்காக லண்டனில் இருந்து வந்தார். அப்போது அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்தார். தொடர்ந்து உடலை துண்டுதுண்டாக வெட்டி வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்டு கலவையுடன் கலந்தார்.
போலீசார் விசாரணையில், மனைவியே கணவனைக் கொன்று டிரம்மில் அடைத்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமீர்பூரில் ஒரு புதுமண ஜோடிக்கு திருமணம் ஆனது. வரவேற்பு விழாவில் புது மாப்பிள்ளையின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பிளாஸ்டிக் டிரம் ஒன்றை திருமணப் பரிசாக அளித்தனர். இதனால் புதுப்பெண் உள்பட திருமண ஜோடியின் முகத்தில் அசடு வழிந்தது. அதனை சிரித்தபடி சமாளித்து நண்பர்களின் விஷமத்தனமான குறும்பு செயலை ஏற்றுக்கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.