இந்தியா

ஊர்க்காவல்படைத் தேர்வில் மயங்கிய பெண்.. ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
- ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
ஜூலை 24 ஆம் தேதி, உடல் தகுதி தேர்வின் போது அந்த இளம் பெண் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, ஊழியர்கள் ஓடும் ஆம்புலன்சில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.
ஆம்புலன்சில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்டு, புத்தகயா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டன.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆம்புலன்சில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.