புதுச்சேரி

புதுச்சேரியில் வணிகம் செய்ய ஒற்றை சாளர முறையை உருவாக்க வேண்டும்- சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
- புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
- புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது.
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டு, வணிகர்கள் நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், அங்காளன், ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் 50 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் 30 சதவீதம் பேர் வெளியூர் சென்று வேலை பார்ப்பதாகவும் கூறினார். மேலும் வணிகர்கள் சுலபமாக வணிகம் செய்ய ஒற்றை சாளர முறையை (Single Window System) உருவாக்க வேண்டும் எனவும், இங்கு ரவுடீசம் அதிகமாக உள்ளது என தொழில் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில்லை. இனி வரும் காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது அவற்றை பண்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். மக்களும் அதைதான் விரும்புகிறார்கள், அது நிச்சயம் நடக்கும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.