புதுச்சேரி

புதுச்சேரியில் குடிநீரில் மீண்டும் கழிவுநீர் கலந்ததால் 10-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
- பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.
அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.