ஐ.பி.எல்.(IPL)

கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர், பொருளாளர் ராஜினாமா
- கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.