கிரிக்கெட் (Cricket)

கே.எல்.ராகுல், படிக்கல் அசத்தல் சதம்: முதல் நாளில் 355 ரன் குவித்த கர்நாடகா
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் கர்நாடக 355 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து கே எல் ராகுலுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 148 ரன்னுடனும், கருண் நாயர் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.





