கால்பந்து

UEFA சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி முதல் லெக்கில் 1-0 என ஆர்சனல் வீழ்த்தியது பிஎஸ்ஜி
- 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
- அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.
பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.