தமிழ்நாடு செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வீல் சேர் வழங்காததால் முதியவரை இழுத்துச் சென்ற மகன்- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு
- வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
- ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கோவை:
கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.
ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.