தமிழ்நாடு செய்திகள்

3 மாணவர்கள் பலி எதிரொலி: ஆழியாறு அணை-ஆற்றில் குளிக்க தடை
- 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
- தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. அணையில் இருந்து தடுப்பணை வழியாக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆழியாறு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆறு மற்றும் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடையை மீறி குளித்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தடுப்பணையில் சுற்றுலாபயணிகள் குளிப்பதை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை, அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஏற்கனவே அணை, தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தடுப்பணை, அணை பகுதிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மேலும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள பகுதி, பாலம், பள்ளி விளங்கால் தடுப்பணைக்கு செல்லும் பகுதி, தடுப்பணை என 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசிடம் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.