என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க. மையக்குழுவுடன் அமித்ஷா ஆலோசனை
    X

    தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க. மையக்குழுவுடன் அமித்ஷா ஆலோசனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை தீவிர கள ஆய்வு மேற்கொண்டது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பலகட்ட ஆலோசனை நடத்திய அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்றபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தமிழகம் வந்த அமித்ஷா அந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற அமித்ஷா, அவர் அளித்த விருந்திலும் கலந்துகொண் டார். அதனை வரவேற்ற அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறிவைத்தும் மதுரையை மையப்படுத்தி மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை காய் நகர்த்தி வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வுக்கு எதிரானது உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பா.ஜ.க., சட்டமன்ற தேர்தலுக்கு தாங்களும் ஆயத்தமாகி விட்டதை அறிவிக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் இன்று மாலை நடைபெறும் அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் அமித்ஷா மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதையடுத்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்த அமித்ஷா, இன்று உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய அவர் பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.



    வழக்கமாக மையக்குழு கூட்டம் என்பது ஒருநாள் முழுவதும் நடைபெறும். ஆனால் குறுகிய காலத்தில் அமித்ஷா வந்துள்ளதால் குறைந்த நேரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன் னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன்,கே.பி.ராம லிங்கம், கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, பொன் பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, எச்.ராஜா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ. க.வை பலப்படுத்துதல், அரசியல் ரீதியாக அதிரடியான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுத்தல், அதற்கேற்றவாறு எந்தமாதிரியான முன்னெடுப்புகளை பா.ஜ.க. மேற்கொள்ள வேண்டும், அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி அமைத்த பிறகு தற்போதைய அரசியல் சூழல் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு அறிந்தார்.

    2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மையக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.

    மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தென் மாவட்டங்களில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி கண்டுள்ளதால் அங்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் அங்குள்ள வாக்காளர்களின் தி.மு.க. வுக்கு எதிரான மனநிலையை பா.ஜ.க.வுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் மாலை 4 மணியளவில் ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேச உள்ளார். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி வியூகம் வகுத்து அதன் மூலம் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த அமித்ஷாவின் தமிழகம் வருகையும் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.வினர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

    அதற்கேற்ப 2026 மிஷன் என்ற இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் இரண்டாம் இடத்தை 10 தொகுதிகளில் பெற்றதுடன், அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளை கட்டாயம் வென்றாக வேண்டும், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக அமித்ஷா நேரடியாக களம் இறங்குகிறார்.

    மேலும் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் வியூகம் வகுத்து அவர் பேச உள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு ஆகியவற்றுடன் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் ஒருங்கிணைக்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளார்.

    மேலும் அமித்ஷாவின் இந்த மதுரை பயணத்தின்போது பா.ஜ.க. மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தலுக்கான வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கட்சியின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.



    மதுரை வருகை தந்துள்ள அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் அவர்களுக்கான ஓட்டு வங்கியை அப்படியே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு அதற்கான வழிமுறைகளையும் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த இருக்கிறார்.

    மதுரையில் இன்று அமித்ஷா பங்கேற்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்றும், கட்சியினருக்கு புதிய ஊக்கம் கொடுப்பதாக அமையும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், விரகனூர் ரிங் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், ஒத்தக்கடை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வேலம்மாள் திடல் ஆகிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×