தமிழ்நாடு செய்திகள்

ஜூலை 25-ந்தேதி முதல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் - அன்புமணி அறிவிப்பு
- தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும்.
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.
டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்தகட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்தபோது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும். சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. சமூக நீதி கடமைகளை திராவிட மாடல் அரசு குழிதோண்டி புதைக்கிறது.
5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை.
மது, கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அவை கட்டுப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
கல்வி, தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. மொத்தத்தில் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு உள்ளது.
அரசின் இந்த அவலங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. ஜூலை 25-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது. இந்த பயணம் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.