என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
    • மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    காவிரி டெல்டா மாவட்ட மக்ககளின் விவசாயத்திற்கு உயிர் நாடியாகவும், குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் 92 ஆண்டு காலமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். நீர் இருப்பை பொறுத்து சில ஆண்டுகள் மட்டும் தண்ணீர் முன்னதாகவும், தாமதமாகவும் திறக்கப்பட்டது.

    நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் மேல் இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தும் கணிசமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான இன்று (ஜூன் 12-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ தூவினார்.

    அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.91 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 339 கன அடியாகவும் இருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.எம். எம்.பி.க்கள் செல்வகணபதி, மணி, மாதேஸ்வரன், மலையரசன், கலெக்டர் பிருந்தாதேவி, சதாசிவம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேட்டூர் அணை திறப்பு மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும். குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.

    அணையின் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், சிறிது நேரத்திற்கு பிறகு அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும். நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் அமைக்கப்பட்டு உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதலில் குறுவை சாகுபடி, பின்னர் சம்பா, தாளடி சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன்படும். 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.9 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.41 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடக்கிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாக 11 முறை என ஏற்கனவே 91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்ததாண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி வழியாக நேற்று மாலை சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தார். அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×