தமிழ்நாடு செய்திகள்

30 ஆண்டுகளாக ஊழல்.. நீங்கள் ரெய்டுக்கு பயப்படும் நேரத்தில் நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்- ஆதவ் அர்ஜூனா
- கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை.
- தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
அப்போது அவர், "30 வருஷமா ஊழல் பண்ணதாலதான் ரெய்டு வருது... ரெய்டுக்கு நீங்க பயப்படும் நேரத்தில், நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இன்றைக்கு பெரும்பாலும் தலைவர்கள் மாநாடு நடத்தினாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ மக்களை காசு கொடுத்து வரவழைக்கும் நிலைமை தான் இருக்கிறது.
ஆனால் இன்றைக்கு பூத் லெவல் மீட்டிங் என்று சொன்ன உடனே நூறு சதவீதம் வருகை இருக்கிறது என்றால் இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி.
கட்சி கட்டமைப்போடு மக்களுடைய ஆதரவு. இன்றைக்கு எங்களுடைய தலைவர் அழைத்தால் லட்ச கணக்கில் மக்கள் அணிதிரள்கிறார்கள் என்றால் அது தவெகவின் வெற்றி.
இளைஞர்கள் கூட்டம் சுமார் 5 ஆயிரம் பேர் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். இதுதான் இளைஞர்களுடைய எழுச்சி.
கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை. அதற்கு எங்கள் தலைவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
மற்ற கட்சிகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால், 40 ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர்கள். குடும்பத்தில் இருந்து ஒரே இளைஞரணி தலைவர். மாவட்ட செயலாளர்களின் வெற்றி என்னவென்றால் 30 ஆண்டுகளாக ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டி செட்டில் ஆகி இருப்பது தான்.
அதனால் தான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. நீங்கள் ரெய்டு வருவதைக் கண்டு பயந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.