தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: தேதியை அறிவித்த தி.மு.க.
- தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
- வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சித் தொண்டர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.
இதற்காக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர். வாக்குச்சாவடி முகவர்கள்- குழுவினர் என லட்சக்கணக்கானோர் கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.
'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு . டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.
மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு 4 பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.
வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.
கட்சித் தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி பங்கீட்டுக் குழு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





