தமிழ்நாடு செய்திகள்

கயத்தாறு அருகே துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து
- காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
- தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் சரவண பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்தது.
இந்த பயங்கர தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.