தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
- இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது.
- தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திருப்பூர்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையிலேயே படுத்து தூங்கினார்.
இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் கடையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து வேகமாக பரவிய தீ காரணமாக பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிய தொடங்கியது. மேலும் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயில் எரிந்து சேதமான பட்டாசுகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.