தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
- முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
- ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு பால்பாண்டி என்பவர் இரவு பணியில் இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.
தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டி அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் தனி அறைக்கு தப்பிச்சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.