தமிழ்நாடு செய்திகள்

தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு
- தூய்மைக் காவலர்கள் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.





