தமிழ்நாடு செய்திகள்

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி வெட்டிக்கொலை - கணவர் உயிருக்கு போராட்டம்
- ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார்.
- கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஜெகதீசன் (வயது 40). இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆண்டுகளாக இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் அவரது இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 12 மணி அளவில் 2 மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளனர்.
இவர்கள் குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளதால் அவர்கள் தான் திரும்பி வந்து சாவி வாங்குவதற்காக கதவை தட்டுகிறார்கள் என நினைத்து கீதா தனது வீட்டின் கதவை திறந்தார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென கீதாவை பிடித்து கழுத்தின் குரல் வளையை அறுத்தனர். மேலும் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் கீழே சரிந்து கீதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் ஜெகதீசனையும் மர்ம கும்பல் வெட்டினர். தலை, கை என 3 இடங்களில் சரமாரியாக வெட்டினர்.
சுதாரித்து கொண்ட ஜெகதீசன் வீட்டின் கதவை கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டார். மர்ம நபர்கள் தொடர்ந்து கதவை தட்டினர். ஆனால் கதவை திறக்கவில்லை. பின்னர் வலி தாங்க முடியாமல் ஜெகதீசன் சத்தம் போட்டு உள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கணவன்- மனைவி இருவரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.