சேலம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன் பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
2023-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் நிதி ஆதாரம் சம்பந்தமாக கேட்டுக்கொள்ள டோக்கியோவுக்கு நானும், துறை அதிகாரிகளும் சென்றோம். டோக்கியோவில் 8 கி.மீ . தூரத்திற்கான நடைபாதை ஹேல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு சாலையில் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இருக்கைகள் நடப்பட்டு நடப்பதினால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைத்து சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது.
அவர்களிடம் 8 கிலோ மீட்டர் என்று நிர்ணயத்திருக்கீறிர்கள் இதற்கான பிரத்யோக காரணம் உண்டா? என்று கேட்ட போது அவர்கள் சொன்னது 8 கி.மீ. நடந்தால் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடியை எடுத்து வைப்போம். அந்த வகையில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் 10 ஆயிரம் அடி நடந்தால் உடலுக்கு நல்லது, எந்த விதமான நோய் பாதிப்பும் இருக்காது என்ற வகையிலான செய்தியை சொன்னார்கள், நாங்கள் சென்னைக்கு திரும்பியதும் முதலமைச்சரிடம் அந்த கருத்தை வலியுறுத்தினோம்.
முதலமைச்சரும் டோக்கியோவில் இருப்பது போலவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வருவாய் மாவட்டங்கள் 38 மாவட்டத்திலும் இந்த ஹெல்த் வாக் ஸ்கீம் 8 கி.மீட்டர் தூரம் அடையாளம் காணப்பட்டு இரு மருங்கிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கைள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
கொட்டும் மழையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களில் இருந்தும் நடப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கவும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வந்திருந்த நான் இன்று காலை நடப்போர் நல சங்கம் வைத்து 700-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே 700-க்கும் மேற்பட்டோர் நடப்போர் நல சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது நாமக்கல் தான் முதலிடமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த வகையில் அந்த நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.
மிக சிறப்பான வகையில் 46 இடங்களில் நிரந்தரமாக நடந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் தொடங்கி டிரினிட்டி கல்லூரி வரை 4 கிலோ மீட்டர், மீண்டும் அங்கிருந்து இங்கு வந்தால் 4 கி.மீட்டர், இரு பக்கமும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 3 அடி உயரத்திற்கான சாலை தடுப்புகள் இருப்பதை பார்த்தோம், அதனை உட்காரும் இருக்கைகளாக மாற்றுமாறு கூறி உள்ளோம். சில இடங்களில் மரங்கள் நட வேண்டியது இடங்கள் இருக்கிறது. சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு சாலையில் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.
ராஜேஷ்குமார் எம்.பி.யிடமும் இதனை வலியுறுத்தி நிறைய சாலைகளை பசுமை பகுதியாக மாற்ற ஆயிரக்கணக்கான மரங்களை குறிப்பாக நாட்டு மரங்களான புங்கை மரம், பூவரசு மரம், அத்தி மரம், நாவல் மரம், வேப்ப மரங்களை நடவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அந்த வகையில் இந்த ஹெல்த் வாக் சாலை மிக சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பவர்களும் மிக சிறப்பாக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்களிடம் சிகிச்சைகள் கேட்டறிந்தார். மேலும் டாக்டர், செவிலியர்களிடம் பொதுமக்கள் வருகை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.