தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதை யாரும் விரும்பவில்லை- அமைச்சர் கே.என்.நேரு
- திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
- தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.
திருச்சி:
அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
மொழி விவகாரத்தில் யாரும் கமல் மன்னிப்பு கேட்பதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம் எல்லாம் வந்தது. அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.
மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .
தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17-ந்தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.