தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடிமரத்தை வழிபட்டபோது எடுத்தபடம்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை- துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
- சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
- கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
சீர்காழி:
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள கொடிமரம் பழுதடைந்து காணப்பட்டது.
இதை அடுத்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு கொடிமரத்தை வழிபட்டார். இதைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, தஷ்ணாமூர்த்தி சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.