தமிழ்நாடு செய்திகள்

திருச்சி, அரியலூரில் 9 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கும் பிரதமர் மோடி
- திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
- முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது.
திருச்சி:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார்.
அங்கு மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக நாளை காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு பைபாஸ் சாலையை ஒட்டி பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.
பின்னர் அங்கும் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வரை ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் இரும்பு பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோடு ஷோவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்பிஜி அதிகாரிகள், எல்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் பொன்னேரி பகுதிக்கு மாற்றப்பட்டது.
அதேபோன்று முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது. அதுவும் பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றப்பட்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.