தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது- ராமதாஸ்
- பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
- என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.
இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.
என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.
2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.
அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.