தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித் ஷா குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறிய ஆர்.பி.உதயகுமார்
- எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.
- எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
தி.மு.க. அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.
எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்.
ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல கேள்வி கேட்கிறீர்கள். கேள்வி கேட்பதும், கேட்க சொல்பவர்களும், அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். இப்போது உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆர்.பி. உதயகுமார் சென்றார்.