தமிழ்நாடு செய்திகள்

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு ரூ.2 லட்சத்தில் வெள்ளி கொலுசுகள்
- டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
- 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் மகாமகத்துடன் தொடர்புடைய கோவில்களில் முதன்மையான கோவிலாக உள்ளது. இந்த கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 1½ கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மங்களத்தின் 2 முன்னங்கால்களில் புதிய வெள்ளிக்கொலுசுகளை அணிவித்தனர்.
அப்போது கோவில் செயல் அலுவலர் முருகன், மற்றும் யானைப்பாகன் அசோக் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்தபடி நின்ற கோவில் யானை மங்களத்தை திரளான பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.