தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வை சரியாக எழுதாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் மாயம்
- நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
- பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தனபால்-சாவித்திரி தம்பதியரின் மகன் சங்கீர்த்தன். தனபால் விசைத்தறி தொழில் செய்து வரும் நிலையில் சங்கீர்த்தன் தனது பள்ளி படிப்பை அரசு பள்ளியில் முடித்துள்ளார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். இதில் அவருக்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து நீட் நுழைவு தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று திருமுருகன் பூண்டியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என சரிபார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அந்த கடிதத்தில், நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மருத்துவ படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன் என தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்த போது சங்கீர்த்தன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சங்கீர்த்தன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.