தமிழ்நாடு செய்திகள்

கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை... அமித்ஷா விமர்சனத்துக்கு சு.வெங்கடேசன் பதிலடி
- ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா.
- பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல்.
மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. . ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.
பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.
சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்.