தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு: தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல்
- வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.
இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.
தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.
தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.
அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.
இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.
அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.