தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. இணைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது- டி.டி.வி. தினகரன்
- நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
- தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.
திருச்சி:
திருச்சி அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பின்பு அ.ம.மு.க. இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க.விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.
அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
அ.தி.மு.க. தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.
அமித் ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.
தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.
டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன்.
தி.மு.க. ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.