தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
- சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதும், பின்னர் நிறுத்தப்படுவதும் என இருந்து வருகிறது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அவ்வப்போது கோடைமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.
அணையின் நீர்மட்டம் 56.36 அடியாக உள்ளது. அணையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதும், பின்னர் நிறுத்தப்படுவதும் என இருந்து வருகிறது.
நேற்று பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு 522 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2944 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1543 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.79 அடியாக உள்ளது. 11.56 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. 10 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
பெரியகுளம் 15, சோத்துப்பாறை 1.5, பெரியாறு அணை 1.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.