தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லை தொடர்ந்து சென்னையிலும் Zomoto, Swiggy சேவை பாதிப்பா?
- கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன.
நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்து உள்ளனர். மேலும் விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உணவு வழங்காமல் நிறுத்தி வைக்க இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நேற்று நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன. எனவே திட்டமிட்டபடி இன்று முதல் நாமக்கல் மாநகரில் கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சென்னையிலும், ஸ்விகி, ஜொமோட்டா மூலம் உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.