உலகம்

உலக நாடுகளின் புற அழுத்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - இஸ்ரேல் திட்டவட்டம்
- இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இங்கிலாந்து ரத்து செய்தது.
- காசாவில் கடும் உணவு பஞ்சம் நிலவுகிறது.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, நேதன்யாகுவின் திட்டத்திற்கும், காசாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும், இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது.
இந்நிலையில், காசா மீதான தாக்குதலுக்கு எதிராக பிற நாடுகளில் இருந்து வரும் புற அழுத்தத்திற்கு தங்கள் நாடு ஒருபோதும் அடிபணியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.