உலகம்

காசா முனையில் இருந்து இரண்டு பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல்
- 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்ட நிலையில், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு 7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அத்துடன் உயிரிழந்த சிலரின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை உருக்குலைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனார்.
பேச்சுவார்த்தை மூலம் இரண்டு முறை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் பிடியில் இன்னும் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வருகிறது. பாதுகாப்பு பகுதிகளை அதிகரிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜூடி வெயின்ஸ்டெயின் (70), கட் ஹக்காய் (72) ஆகிய இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவிகளாக இவர்கள் கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் நடைபயணம் மேற்கொண்ட போது ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொலை செய்து உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் கொல்லப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.
இருவருடைய உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு "இஸ்ரேலின் அனைத்து மக்களுடன் நானும், எனது மனைவியும் இணைந்து, அவர்களுடைய அன்பான குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பயங்கரமான இழப்பால் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன. அவர்களில் நினைவு ஆசீர்வதிக்கப்படட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜூடி வெயின்ஸ்டெயின், கட் ஹக்காய் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.