உலகம்

4 பேரை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்த நபர் - நியூ யார்க் துப்பாக்கிச்சூடு பற்றிய திடுக் தகவல்
- அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" என்ற மூளை நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
- ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் தமுரா என்பவரும், தன்னைத்தனே சுட்டுக்கொண்டதில் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
போலீஸ் கூற்றுப்படி, உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான ஷேன் தமுரா, கைத்துப்பாக்கிக்கான உரிமம் பெற்றிருந்தார். காலாவதியான தனியார் துப்பறிவாளர் உரிமமும் அவரிடம் இருந்துள்ளது.
அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 6:40 மணியளவில் மன்ஹாட்டனின் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தின் வரவேற்பறையில் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
பின்னர் அவர் 33வது தளத்திற்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவரிடம் ஒரு தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" (Chronic Traumatic Encephalopathy - CTE) என்ற மூளை நோய் இருப்பதாக எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் நடந்த மிட் டவுன் மன்ஹாட்டன் கட்டிடத்திலிருந்து 15 நிமிடங்கள் தொலைவில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.