உலகம்

கழுத்தை அறுத்துவிடுவேன்.. இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாகிஸ்தான் தூதர்
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
- லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அதிக சத்தத்துடன் இசையை இசைக்க வைத்தனர். தூதரக மாடியில் நின்று கொண்டு இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் ஆலோசகருமான கர்னல் தைமூர் ரஹத், போராட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.