உலகம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்
- உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் உக்ரைனின் சிறைச்சாலை, மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, போர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத ரஷியா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷிய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இவை வேண்டுமென்றே, நடத்தப்பட்ட தாக்குதல்கள். தற்செயலானவை அல்ல என தெரிவித்தார்.